5-வது புரோ ஹாக்கி லீக் தொடர் 9 அணிகளுக்கு இடையே பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. இந்த தொடரின் இரண்டு சுற்று லீக் போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வரில் வரும் 10ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது.
அதேபோல் ரூர்கேலாவில் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய அணிகளுடன் தலா 2 முறை விளையாடவுள்ளது.
முதல் இரண்டு லீக் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி நேற்றிரவு ஆஸ்திரேலியா உடன் விளையாடியது. இந்த போட்டியில் இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் அடிப்பதில் தீவிரம் காட்டின.
இதனால் இந்த போட்டியில் வீரர்கள் அடிக்கடி கோல் எல்லையை முற்றுகையிட்டனர். இதனால் இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்து முன்னிலை பெற்ற வண்ணம் இருந்தன.
இருப்பினும் இந்தப் போட்டியில் இந்தியா 4-6 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. இந்தியா தரப்பில் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்களும், சுக்ஜீத் சிங் மற்றும் மந்தீப் சிங் தலா 1 கோலும் அடித்தனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் கோவர்ஸ் பிளேக் 2 கோல்களும், சலேஸ்கி ஆரன், சார்ப் லச்சிலன், ஆண்டர்சன் ஜேக்கப் மற்றும் வெல்ச் ஜேக் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.